தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி குண்டல்பட்டி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கறவை மாடு வளர்ப்பில் பால் உற்பத்தி மற்றும் தொழில்முனைவு மேம்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது.
மையத்தின் தலைவர் டாக்டர் கண்ணதாசன் பயிற்சி அளித்தார். கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக, விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளில் பால் உற்பத்தியை நிலை நிறுத்தவும், பாலின் தரத்தை மேம்படுத்தவும், கோடை காலத்தில் காற்றோட்டமாக கொட்டகையை பராமரித்தல், தீவனம் மற்றும் நீர் அளித்தல், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து விளக்கப்படங்கள் மற்றும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
மையத்தில் அமைந்துள்ள அசோலா செயல்விளக்க திடலையும், மாதிரி தீவன ஆலையையும், மையத்தின் கண்காட்சிக் கூடத்தையும் விவசாயிகள் பார்வையிட்டு, பால் உற்பத்தி மற்றும் தொழில் முனைவு வாய்ப்புகள் குறித்த தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். பயிற்சி முாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பயிற்சி கையேடும், கறவை மாடுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் பல்கலைக்கழகத்தின் கிராண்ட் ஊட்டச்சத்து பானமும் வழங்கப்பட்டன. இதில், 16 விவசாயிகள் கலந்து கொண்டனர்.