மயிலாடுதுறை, ஆக. 20: கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் தென்னிந்திய அளவிலான மாபெரும் விளையாட்டுப் போட்டியை கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா யோக மையம் நடத்துகிறது. இதன் முதல்கட்டமாக வாலிபால் பிரிவில் மாவட்ட அளவிலான போட்டி மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய அனைத்து தாலுகா பகுதிகளில் இருந்தும் 22 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் பந்து வீசி போட்டிகளை தொடக்கி வைத்தார். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே தலா ரூ.9 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ஆகிய ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், முதல் 4 அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈஷா யோகா மைய நிர்வாகிகள் பாலு, சபேசன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.