கரூர்: வாகன ஓட்டிகளுக்கு விபத்தை விளைவிக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பாக, ரயில்வே நிலைய வளாகம், ரத்தினம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், மக்கள் பாதை, ஐந்து ரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் அதிகளவு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளில் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள், சாலையில் சுற்றித்திரிவது, சாலையோரம் படுத்து கிடப்பது சர்வசாதாரணமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதில் பலர் காயமடையும் நிலை உருவாகிறது. எனவே, கால்நடைகள் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரிவதை கண்காணித்து அதனை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். மேலும், கால்நடை உரிமையாளர்களுக்கு, இது குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
previous post