க.பரமத்தி, ஜன. 14: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை வைரமடை பேருந்து நிறுத்தம் பிரிவில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 33வது கி.மீட்டரில் வைரமடை பேருந்து நிறுத்தம் உள்ளது. இதில் 4 சாலைகள் சந்திக்கின்றன.
இவ்வழியாக தினமும் ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுகை, அரியலூர், காரைக்கால் போன்ற வெளிமாவட்டங்களுக்கும் ஜல்லிகற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் கோவையிலிருந்து செல்லும் கனரகவாகனங்கள் மற்றும் வேன்கள் என ஏராளமாக இந்த வழியாக சென்று வருகின்றன. ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் சாலை பிரிவது குறித்த அறிவிப்பு பலகை எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் அசுர வேகத்திலேயே சென்று வருகின்றன.
இதனால் வைரமடை பேருந்து நிறுத்த பிரிவு சாலையில் இருந்து கரூர் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நுழைவதற்கு வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல கரூர் பகுதிகளிலிருந்து இந்த பிரிவு ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும் திரும்ப மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.