சாத்தான்குளம், மே 12:சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்திற்கு கண்டுகொண்டான் மாணிக்கம்,கருவேலம்பாடு, ஆனந்தபுரம், தைலாபுரம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த டவுன் பஸ்சில் ஊரின் பெயர் டிஜிட்டலில் வலம் வருகிறது. அதில் நாசரேத், கருநீலம்பாடு, சாத்தான்குளம் எனவந்து செல்கிறது. நாசரேத்தில் இருந்து கருவேலம்பாடு கிராமத்திற்கு மக்கள் சென்று வருகின்றனர். இதில் கருவேலம்பாடு என்ற ஊரின் பெயர் கருநீலம்பாடு என வருவதால் குழப்பத்தில் அந்த ஊரின் மக்கள் பஸ்சை தவறவிடும் நிலை ஏற்படுகிறது. ஊரே இல்லாத பெயரில் பஸ்சில் பெயர் வருவதால் பயணியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் அரசு டவுன் பஸ்சில் ஊர் பெயரை சரியான முறையில் எழுத்து பிழை இல்லாமல் பெயர்ப் பலகையில் பதிவு செய்து இயக்கப்பட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்