அன்னவாசல்,ஜூலை 10: அன்னவாசல் அருகே கணவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற கருமாதி நிகழ்வுக்கு உறவினரை அழைக்காததை கண்டித்து அவர்கள் வீட்டுற்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு வீட்டின் கதவை சேதப்படுத்தியதாக கணவரை இழந்த பெண் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் சகோதரர்கள் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் கீழ அகரபட்டியைச் சேர்ந்தவர் வேணி(40). இவரது கணவர் மணிமுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
இந்த நிலையில் இறந்த பின்னர் நடத்தப்படும் துக்க நிகழ்வுக்கு இவர்களின் உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த சகோதரர்களான முத்துகுமார், புகழேந்தி, கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரையும் அழைக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் வேணியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால், திட்டியதோடு வீட்டின் இரும்பு கேட்டை சேதப்படுத்தியதாக வேணி அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.