திருபுவனை : கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள பாழடைந்த திருமண மண்டபத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கரியமாணிக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வெங்கடசுப்பா ரெட்டியார் திருமண மண்டபம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சுப நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. பல ஆண்டுகளாக இந்த மண்டபம் பராமரிப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் சில சமூக விரோதிகள் அந்தக் கட்டிடத்தில் இருந்த கதவுகளையும், இரும்பு பொருளையும் திருடிச் சென்றுவிட்டனர். கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால் சிலரின் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. மேலும் அங்கு புதர் மண்டி இருப்பதால் பாம்பு, பூச்சிகள் அதிகளவில் உள்ளன. அவை குடியிருப்பு பகுதிக்கு வருவதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.எனவே, அந்த கட்டிடத்தை உடனடியாக இடித்துவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்….