கன்னியாகுமரி, ஏப்.26: கன்னியாகுமரி அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து ஊராட்சி ஊழியர் பலியானார்.கன்னியாகுமரி அருகே லீபுரத்தை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார்(74). இவர் பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று காலை ஜாஸ்பர் செல்வகுமார் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தோப்புக்கு சென்றுள்ளார். அந்த தோப்பை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை அந்த கம்பி வேலியின் அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து கம்பி வேலியின் மீது விழுந்தது. இதில் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்தது. இதை அறியாத ஜாஸ்பர் செல்வகுமார் தோட்டத்தின் கம்பிவேலியை தொட்டுள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜாஸ்பர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜாஸ்பர் செல்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.