கந்தர்வகோட்டை, மார்ச் 20: கந்தர்வகோட்டை பகுதியில் சாலையோர சருகுகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி மற்றும் பெருங்களூர் பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்திருந்த உளுந்து, எள் மகசூலை சேகரித்துக் கொண்டு சாலை ஓரத்தில் விட்டு சென்று விடுகிறனர். அதனை மீண்டும் குப்பை குழிகளிலும், வயல்களிலும் அள்ளி போடுவதற்கும் முன்பே இருசக்கர வாகன ஓட்டிகள் புகை பிடித்துவிட்டு அதனை அணைக்காமல் சாலை ஓரத்தில் தூக்கி எறிந்து விட்டுள்ளனர் என தெரிகிறது. இதனால் சாலை ஓரத்தில் இருக்கும் சருகுகள் எரிந்து புகை மண்டலமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமப்பட்டனர். எனவே புகைபிடிப்பவர்கள் சாலையோரத்தில் நெருப்பு ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.