பெரம்பூர், மார்ச் 23: புளியந்தோப்பு பகுதியில் கத்தியுடன் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் கஞ்சா வைத்திருந்த மற்றொரு நபரும் சிக்கினார். பேசின் பிரிட்ஜ் பகுதியில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் கானா பாடலுக்கு நடனமாடி பொதுமக்களை அச்சுறுத்தம் வகையில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்சாக வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது.
இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், புளியந்தோப்பு காந்திநகர் 5வது தெருவை சேர்ந்த குபேரன் (எ) சக்தி (19) என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் புளியந்தோப்பு ராஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராசன் (32) என்ற நபரும் இருந்தார். இருவரையும் சோதனை செய்தபோது அவர்களிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.