நாகப்பட்டினம்,நவ.26: கட்டுமாவடி ஊராட்சியில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் 1181 பேர் பயனடைந்தனர். நாகப்பட்டனம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு பள்ளியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் 1181 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், ஊராட்சி துணைத் தலைவர் ஷோபா பாரதிமோகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கட்டுமாவடி -புறாக் கிராமம் ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்பட்டது.