சென்னை: கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை மாற்றக்கோரி 3-வது நாளாக அதிமுகவினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதற்காக தி.மு.க., அதிமுக, ம.நீ.ம., அமமுக உள்பட பல கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது. கடந்த 5ம் தேதி அதிமுக சார்பில் முதல்கட்டமாக முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிட்டது. அதன்பின், 10ம் தேதி 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்பட பலருக்கு சீட் மறுக்கப்பட்டது. சீட் தராததால் இவர்களின் ஆதரவாளர்கள் சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது, 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தீக்குளிக்க முயற்சி: தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அக்கட்சியினர் கடந்த 3 நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன் பாமக ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சபரி (26) என்பவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீசார், சபரியை தடுத்து, அவரை மீட்டனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (தனி) தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கியதை கண்டித்து 2 நாட்களாக சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3-வது நாளாக நேற்று, வடுகந்தாங்கல் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, செஞ்சியை சேர்ந்த 45 வயது தொண்டர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். சிட்டிங் எம்.எல்.ஏ. தூசி மோகன்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற ெதாகுதியின் அதிமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட செயலாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் போட்டியிடுகிறார். இவரை மாற்றக்கோரி சுமார் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் செய்யாறு மார்க்கெட் சந்தை திடலில் திரண்டனர். தொடர்ந்து, மார்க்கெட், காந்தி சாலை, பஸ் ஸ்டாண்டு, ஆற்காடு சாலை வழியாக ஆரணி கூட்ரோடு வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது, ‘‘தொகுதிக்கு எதுவும் செய்யாத எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்டா? செய்யாறு தொகுதி வேட்பாளர் தூசி கே.மோகனை மாற்ற வேண்டும்’’ என கோஷமிட்டனர். இவர்களில் பலரும், அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை ஆகிய பகுதிகளில் திடீரென சாலையில் உருண்டு புரண்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பாமக தலைவர் ஜி.கே.மணிக்கும் எதிர்ப்புதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியை பாமகவுக்கு அதிமுக தலைமை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த தொகுதிக்கான வேட்பாளராக பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பென்னாகரம் அதிமுக சார்பில் தர்மபுரி மாவட்ட மகளிரணி துணைத்தலைவி சுசீலா தலைமையில், பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன், நேற்று 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட போவதில்லை என எச்சரிக்கை விடுத்து கோஷமிட்டனர். கூட்டணியில் பாமகவுக்கு அதிமுக முக்கியத்துவம் கொடுத்து தொகுதி வழங்கி உள்ளது. ஆனால், பாமக கட்சி தலைவர் ஜி.ேக.மணிக்கும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது….