கடையம்,மார்ச் 26: கடையம் அருகே மாதாபுரம் சோளத்தட்டைக்குள் பதுங்கியிருந்த ராட்சத மலைப் பாம்புகளை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். கடையம் அருகே மாதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டருகேயுள்ள வயலில் மாட்டு தீவனத்திற்காக சோளம் பயிரிட்டுள்ளார் . தொடர்ந்து அவர் நேற்று மாடுகளுக்கு சோளத்தட்டை அறுக்க வயலுக்கு சென்றார். அப்போது சோளத்தட்டைக்குள் ராட்சத உருவத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்துச் சென்றது. இதைப் பார்த்த அதிர்ச்சியில் அலறியடித்த படி வெளியே ஓடிய செல்வம் பின்னர் இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோளத்தட்டைக்குள் பதுங்கி இருந்த ஒரு மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதன் அருகே மற்றொரு மலைப்பாம்பும் அங்கு பதுங்கி இருந்தது. இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த 10 அடி நீளம் கொண்ட ஆண், பெண் என இருமலை பாம்புகளையும் லாகவமாகப் பிடித்து ராமநதி பீட்டுக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.