கடையநல்லூர், ஆக.9: கடையநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது கடும் வெயிலால் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணாபுரம் பீட்டுக்குட்பட்ட கருப்பாநதி அணை வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அதிக வெயிலின் தாக்கத்தால் காய்ந்து கிடந்த இலை சருகுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மற்ற இடங்களுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் உத்தரவின் பேரில் வனவர் முருகேசன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அதிக தூரம் வனத்துக்குள் சென்று சென்று காட்டுத்தீயை அணைப்பதில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.