Sunday, June 16, 2024
Home » கடைமடை பகுதியில் சேதமான பிஏபி வாய்க்காலை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் எதிர்பார்ப்பு

கடைமடை பகுதியில் சேதமான பிஏபி வாய்க்காலை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் எதிர்பார்ப்பு

by kannappan

காங்கயம் :  பிஏபி பாசனத்திட்டத்தில் கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக் கோவில் கிளை வாய்க்காலில் காங்கயம், வீரசோழபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வாய்க்காலின் கான்கிரீட் முழுமையாக சேதமடைந்து பெயர்ந்துள்ளது‌.கடந்த ஆட்சியில் சரிசெய்யவில்லை. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இருபெறும் பாசனத் திட்டங்களாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசனக் கால்வாய் (பிஏபி) மற்றும் கீழ்பவானி பாசனம் (எல்பீபி) ஆகியன உள்ளன‌.இதில் அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு மற்றும் அமராவதி ஆற்றின் மூலம் செயல்படுத்தப்படும் பாசனத்திட்டங்கள் குறைந்த பரப்பளவில் உள்ளது.இ தில் திருப்பூர் மாவட்டத்தில் சற்றேறக் குறையாக மாவட்டத்தின் பெரும்பகுதிக்கு பாசனம் கொடுக்கும் திட்டமாக பிஏபி உள்ளது. திருமூர்த்தி அணை முதல் கடைமடை வரை 127 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப் பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.இதில் கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக் கோவில் கிளை வாய்க்காலில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் கடைமடைக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் வீணாகிறது. இதற்கு வாய்க்காலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.வெள்ளக்கோவில் கிளை கால்வாய் ஆரம்பமாகும் பகுதியில் இருந்து கடைமடை பகுதியான இடைகிணறு பகுதி வரை உள்ள வாய்க்கால் நீளம் 27.65 கிலோ மீட்டராகும்‌.இதன் மூலம் பிரியும் கிளை வாய்க்கால்கள் மூலம் காங்கயம், ஓலப்பாளையம்,வெள்ளகோவில் சுற்றுப்பகுதிகளில் 48 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் நான்கு சுற்றுகள் மூலம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பாசனம் பெறுகிறது‌.இந்த நிலையில் பிஏபி பிரதான வாய்க்காலில் உடுமலை அருகே சில பகுதிகளில் கால்வாய் கரை மோசமாக பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் வரும் தண்ணீர் திறப்புக்கு முன் நடைபெற்றால் கடைமடைக்கு தரவேண்டிய தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.குறிப்பாக வெள்ளக்கோவில் கிளைக் கால்வாய் தொடங்கும் பகுதியில் இருந்து,கால்வாய் முடிவுறும் இறுதி மடை வரை உள்ள கால்வாயின் பல இடங்களில், கான்கிரீட் பெயர்ந்தும்,மண் தூர்ந்தும்,குப்பைகள் குவிந்தும் உள்ளது‌. முழுமையான கான்கிரீட் கால்வாய் என கூறப்படும் பிஏபி வாய்க்காலில் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து மண் கால்வாயாக மாறி உள்ளது. இதில் தரைதள பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக பாசனத்துக்கு நீர் வந்து சேர்வதில் பெரும் தடங்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு தண்ணீர் விடப்பட்டாலும் முழுமையாக நிலங்களுக்கு பாசனத்துக்கு செல்லாமல்,வழியில் வீணாகும் நிலை ஏற்பட்டுளள்ளது. கடந்த அதிமுக அரசும் விவசாயிகள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.இந்த நிலை குறித்து வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் கூறுகையில்,ஏற்கனவே பல ஆண்டு போராட்டத்துக்கு பின் தற்போது தான் எங்கள் பகுதிக்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் முன்னேறியுள்ளோம். ஆனால் அவ்வாறு பெற்ற நீரே நிலங்களுக்கு கொண்டு வருவதில் பெரிய தடங்கலாக வாய்க்காலில் உள்ள கான்கரீட் பல இடங்களில் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் மண் குவிந்து நீரோட்டத்தை தடை செய்யும் நிலையும், கால்வாயின் அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக்,வீட்டு உபயோக கழிவுப் பொருட்களால் வாய்க்கால் அசுத்தமாகியுள்ளது. எனவே பொதுப் பணித்துறை வெள்ளக்கோவில் கிளை கால்வாயில் சிதிலமடைந்துள்ள கான்கிரீட் பகுதிகளை சீரமைத்து,கால்வாயில் குவிந்துள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினார்….

You may also like

Leave a Comment

four × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi