சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(34), பட்டுத்தறிக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, இலங்கை பருத்தித்துறை அருகே சூம்பளை தெற்கு பகுதியை சேர்ந்த ராசகுமார் மகள் நிஷாந்தினி (23) என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் மெசஞ்சர் மூலம், இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி போனில் பேசியுள்ளனர். அதில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக போனில் பேசியே காதலை வளர்த்த நிலையில், காதலனை கரம் பிடிக்க முடிவு செய்த நிஷாந்தினி, கடந்த 15 நாட்களுக்கு முன் தாயாருடன் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார். சென்னை வந்திறங்கிய அவர், சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள காதலன் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு இரு குடும்பத்தாரும் சந்தித்து பேசினர். பிறகு கடந்த 7ம் தேதி, அங்குள்ள பெருமாள் கோயிலில், காதலன் சரவணனை நிஷாந்தினி கரம் பிடித்தார். உடனடியாக ஓமலூர் பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய சென்றனர். அங்கு சுற்றுலா விசாவில் வந்த பெண்ணின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது. திருமண விசாவில் வந்திருக்க வேண்டும் அல்லது தடையில்லா சான்று பெற்று வரவேண்டும் எனக்கூறி அனுப்பி விட்டனர். இதனிடையே, நிஷாந்தினியின் சுற்றுலா விசாவின் காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருப்பதால், சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று, காதல் கணவனுடன் சென்ற நிஷாந்தினி, எஸ்பி அபிநவ்விடம் ஒரு மனு கொடுத்தார். அதில், இருவரும் 5 ஆண்டாக காதலித்துவரும் விவரத்தை கூறி திருமணத்தை பதிவு செய்ய தடையில்லா சான்று வழங்க ஆவன செய்யுமாறு கூறியுள்ளார். போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், முறைப்படி திருமண விசாவில் இந்தியா வந்து, இங்கு திருமணம் செய்துகொண்டு, முறையாக கணவருடன் வாழ இந்திய அரசிடம் குடியுரிமை பெற வேண்டும் என்றனர்….