நாகர்கோவில், பிப்.2: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி 14ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்றவர்களில் சமையல் பணிக்காக சென்ற தேங்காப்பட்டணம் கிராமத்தை சேர்ந்த ஜலாலுதீன்(38) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி ஆழ்கடலில் விசைப்படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ஜலாலுதீன் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.