ராமநாதபுரம், ஜூன் 17: கடலாடியில் நடந்த ஜமாபந்தியில் 301 மனுக்கள் பெற்று 52 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் ஜமாபந்தி கடந்த 6 ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. எஸ்.தரைக்குடி, சாயல்குடி. கடலாடி, சிக்கல், ஆப்பனூர், மேலச்செல்வனூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்களிலிருந்து 43 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாறுதல்,
இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நில ஆவணங்கள் சம்பந்தமாகவும், இதர அரசு உதவிகள் கேட்டும் கோரிக்கை மனு அளித்தனர். இதில் பெறப்பட்ட 301 மனுக்களில் 51 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. 197 மனுக்கள் வருவாய் துறையின் மேல் நடவடிக்கையில் உள்ளது. பிற துறைகள் சம்பந்தமான உதவிக்கோரிய 52 மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் ஜெயமணி, தாசில்தார் ரெங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.