புதுச்சேரி, ேம 3: புதுச்சேரியில் வங்கிக் கடனை பைசல் செய்வதாக கூறி, வியாபாாியிடம் ரூ.50.45 லட்சத்தை நூதனமாக மோசடி செய்த நண்பர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிந்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். புதுச்சேரி, வில்லியனூர், கிருஷ்ணா நகர், காமராஜர் சாலையில் வசிப்பவர் அப்பாவு (62). இவரது மகன் பரணிதரன் (37). இவருக்கு கடை வைப்பதற்காக தனியார் பைனான்ஸ் மூலம் அப்பாவு தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.58 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் சரிவர தவணையை கட்ட முடியாததால் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து தனது நண்பரான விழுப்புரம், பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த மயிலாசலம் என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அவர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ்குமார் என்பவர் மற்றொரு பைனான்சில் வேலை செய்வதாகவும், அவர் மூலம் கடனை பேசி பைசல் செய்து விடலாம் என்றுகூறவே அப்பாவுவிடம் பேச வைத்தார். பின்னர் ரமேஷ்குமாரை, அப்பாவு நேரில் சந்தித்த பேசியதை நம்பி கடந்த 2020 செப்.21ம்தேதியில் ரூ.20 லட்சத்தை வங்கி மூலம் ரமேஷ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து 2 வங்கிகள் மூலமாக மொத்தமாக ரூ.50 லட்சத்து 45 ஆயிரம் செலுத்தியதாக தெரிகிறது.
இதனிடையே 2023 ஜனவரி 20ம்தேதி வீடு ஜப்திக்கு வருவதாக வங்கியிலிருந்து அப்பாவுக்கு தகவல் வரவே அதிர்ச்சியடைந்தார். தனது நண்பரான மயிலாசத்தை தொடர்பு கொண்டபோது ஏமாற்றப்பட்டதை உறுதி செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன், எஸ்ஐ வேலு தலைமையிலான போலீசார், நம்பிக்கை மோசடி (420) பிரிவின்கீழ் மேற்கண்ட 2 பேர் மீதும் வழக்குபதிந்த போலீசார், தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.