உளுந்தூர்பேட்டை, பிப். 20: உளுந்தூர்பேட்டையில் போலீசார் வாகன சோதனை நடத்தி பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சேலம் ரோடு மூலசமுத்திரம் தக்கா அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமாக சென்றவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார். இருவரையும் தீவிர விசாரணை செய்ததில், அவர்கள் வளவனூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (25), விருத்தாசலம் அருகே புதுகுப்பத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.