தேவதானப்பட்டி, அக். 4: தேவதானப்பட்டி எஸ்.ஐ.,தேவராஜ் மற்றும் போலீசார் தேவதானப்பட்டி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் திருப்பூர், செட்டிபாளையம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (24), சுரேஷ்(23) என்பதும் அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த கஞ்சாவை பெரியகுளம் கைலாசபட்டியைச் சேர்ந்த சவுந்திரபாண்டி(45) என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கொடுத்து விற்பனைக்காக வாங்கி வந்தது தெரியவந்தது. தேவதானப்பட்டி போலீசார் பாரதிராஜா, சுரேஷ், சவுந்திரபாண்டி ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.