செங்கல்பட்டு: கஞ்சா வியாபாரிகளை பிடிக்க சென்ற காவலர்களை 3 பேர் சரமாரியாக அடித்து, உதைத்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றங்கரையோரம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவலர்களான பாலசுந்தரம் (31), கோகுல் (27) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த அதேபகுதியைச் சேர்ந்த சுதாகர் (39), பார்த்திபன் (42), ஐயப்பன் (35) ஆகியோரை மடக்கி, பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த காவலர்கள், காவல் நிலையத்திற்கு மூவரையும் அழைத்துள்ளனர். அப்போது, வர மறுத்த அவர்கள் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக அடித்து, உதைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், காயமடைந்த போலீசார் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். …