தர்மபுரி, ஆக.30: கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாடப்படுகிறது. மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்ரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம்போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
இதன் அடிப்படையில் தர்மபுரியில் பல்வேறு பகுதியில் வசிக்கும் கேரளம் மக்கள் நேற்று ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். தர்மபுரி கந்தசாமி வாத்தியார் தெரு, சின்ன வாத்தியார் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் கேரளம் மக்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகை கொண்டாடினர். பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வண்ண, வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ஒருவருக்ககொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தர்மபுரி ராமா போர்டிங் ஓட்டலில் ஓணம் சத்யா சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. இதுபோல தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓணம் பண்டிகை களை கட்டியது.