Wednesday, May 22, 2024
Home » ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம் மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிசாமி திடீர் கெடு

ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம் மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிசாமி திடீர் கெடு

by kannappan

சென்னை: மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கோட்டாவில் ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் இருப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் பன்னீர்செல்வம் திணறி வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் கெடு விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிகிறது. இதனால் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்எல்ஏக்களின் விகிதாச்சாரப்படி திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்பிக்களும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதில் திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் 2 சீட்டுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதால் ஆளுக்கு ஒரு சீட் வேண்டும் என்று இருவரும் கேட்டுக் கொண்டதால், கடந்த வாரம் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் அதிக அளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் கூட்டம் தொடங்கியவுடன் கருத்துக்களை கூறலாம் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர் எழுந்து, நாங்கள் எல்லோருமே சீட் கேட்டுள்ளோம். எங்களிடம் கருத்துக்கள் கேட்டால் நன்றாக இருக்காது. தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய 4 பேர் கூடிப் பேசி 2 வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார். ஜெ.சி.டி.பிரபாகரன் சொன்னதால், மற்ற தலைவர்கள் அமைதியாகிவிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டமும் கானல் நீராகிவிட்டது. இதனால் 4 பேரும் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, எடுத்தவுடன் 2 வேட்பாளர்களை நீங்கள் தயாராக வைத்துள்ளீர்கள். அதன்படி ஜெயக்குமார், சி.வி.சண்முகத்தை அறிவித்தால் நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம். உடனே எங்களிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை. யார் உங்களுக்குச் சொன்னது. பட்டியலை உறுதி செய்யத்தான் கூட்டம்போட்டோம் என்றார் எடப்பாடி. பின்னர் நீங்களே ஒருவரை அறிவியுங்கள் என்றவுடன், பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமியும் சரி நீங்கள் சொன்னபடி ஒரு சீட் கொடுக்கிறோம். வேட்பாளரை சொல்லுங்கள் என்றவுடன் பின்னர் அறிவிக்கிறேன் என்று கூறினார். இதனால் கூட்டம் முடிந்தது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பாக ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியனுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என முக்குலத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து கையெழுத்துப் போட்டுக் கடிதம் கொடுத்தனர். இதை வைத்துத்தான் பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். இந்த திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிப்பார். அதை வைத்து தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாய தலைவர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்று பன்னீர்செல்வம் திட்டமிட்டார்.ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார். அதற்கு காரணம், தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் எல்லோரும் எடப்பாடியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இதனால்தான் எடப்பாடியும் சம்மதித்து விட்டார். ஆனால், நாம் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு ஒன்று பன்னீர்செல்வம் தனது கோட்டாவுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய முடியாததால், அறிவிக்காமல் உள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பலரும் அந்த சீட்டுக்கு போட்டி போடுகின்றனர். அதேநேரத்தில், ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதால் உடனடியாக பட்டியலை வழங்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.மேலும், தென் மாவட்டத்தில் யாரை அறிவித்தாலும் அது தன்னுடைய ஆதரவாளராகத்தான் இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதேநேரத்தில், வட மாவட்டத்தில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகிய 2 பேர் சீட்டு கேட்டு போராடி வருகின்றனர். அந்த இருவரில் ஒருவரை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். மேலும், சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம், வேலூர் என 6 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என 60 பேர் கையெழுத்துப் போட்டு ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் ஜெயக்குமாருக்கு ஆதரவாக யாரும் கடிதம் கொடுக்கவில்லை. இதனால் யாரை அறிவிப்பது என்று எடப்பாடி குழப்பத்தில் உள்ளார். அதேநேரத்தில் இருவரில் ஒருவருக்கு சீட் வழங்க முடிவு செய்துள்ளதால் மற்றொருவரை சமாதானப்படுத்தும் வேலைகள் தீவிரமாகியுள்ளன. சி.வி.சண்முகத்தை அறிவித்துவிட்டு, ஜெயக்குமாரை சமாதானப்படுத்தும் பணிகள் தீவிரமாகியுள்ளன. இதனால் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதால், அதிமுகவில் பூகம்பம் வெடிக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்  ஜெ.சி.டி.பிரபாகர் எழுந்து, ‘நாங்கள் எல்லோருமே சீட் கேட்டுள்ளோம்.  எங்களிடம் கருத்துக்கள் கேட்டால் நன்றாக இருக்காது. தலைவர்களான  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய 4 பேர் கூடிப் பேசி 2 வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அதற்கு நாங்கள்  கட்டுப்படுவோம்’ என்றார்.* கோட்டை விட்ட ஓ.பன்னீர்செல்வம் முக்குலத்து சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து தங்களில் ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று பன்னீர்செல்வத்தைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜெ.சி.டி.பிரபாகருக்கு சீட் கொடுங்கள் என்று கூறுங்கள். ஜெ.சி.டி.பிரபாகர் எப்போதும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பவர். மேலும், அவர் வடமாவட்டங்களில் அதிக அளவில் இருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சீட் வழங்கினால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்துக்கு எடப்பாடி பழனிசாமியால் சீட் வழங்க முடியாது. அவர் ஜெயக்குமாருக்குத்தான் சீட் கொடுக்க வேண்டியது வரும். அப்படி செய்தால், சி.வி.சண்முகம் கோபப்படுவார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்புவார். வடமாவட்டங்களில் உள்ள வன்னியர்களும் எதிராக திரும்புவார்கள். மேலும், தென் மாவட்டத்தில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை நீங்கள் மாட்டி விடுங்கள். இதனால், எடப்பாடியால் ஜெயக்குமாருக்கும் சீட் கொடுக்க விடாமல் செய்து, தென் மாவட்டத்தில் முக்குலத்தோரில் எடப்பாடி ஆதரவாளருக்கு சீட் கொடுக்க வைத்திருக்கலாம். அப்படி செய்தால், தன்னை சந்தித்த தென் மாவட்ட நிர்வாகிகளையும் சமாதானப்படுத்துவது போலாகிவிட்டது. தீவிர ஆதரவாளருக்கும் சீட் கொடுத்தது போல செய்யலாம். ஜெயக்குமாருக்கு கொடுத்து, தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்காவிட்டால், தென் மாவட்ட நிர்வாகிகளை எடப்பாடிக்கு எதிராக திருப்பிவிடலாம். மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தில் தோற்றுவிடுவார் என்று கூறியுள்ளனர். ஆனால் சரி என்று சொன்னவர், 4 பேர் ஆலோசனையின்போது ஜெ.சி.டி.பிரபாகர் பெயரைச் சொல்லாமல் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுங்கள் என்றார். எடப்பாடியும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சரி என்று கூறிவிட்டார். தென் மாவட்டத்தில் முக்குலத்தோரில் 99 சதவீதம் பேர் எடப்பாடியின் ஆதரவாளர் என்பதால், தற்போது ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடியின் ஆதரவாளரையே வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டார் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்….

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi