பேராவூரணி ஆக. 31: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார். கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத்தலைவர் கரியப்பட்டி காமராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத, மக்களிடையே வகுப்புவாதத்தை தூண்டி மக்களை பிளவுபடுத்தும், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஒன்றிய அரசை கண்டித்து செப்டம்பர் 7ம்தேதி ரயில் மறியல் போராட்டத்தை பேராவூரணியில் நடத்துவது, பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு பகுதியில் குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமாரசாமி, பாஸ்கர் ஜகுபர்அலி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.