போளூர், ஏப்.17: போளூர் காவல் நிலையத்திற்கு ஐஎஸ்ஐ தரச்சான்று, போலீசாரை எஸ்பி பாராட்டினார். போளூர் காவல் நிலையம் அனைத்து அலுவலகங்களுடன் அமைந்துள்ளது. காவல் நிலையத்தில் பொதுமக்கள் வந்து அமர்ந்து தங்கள் புகார் மனுக்களை தர காத்திருப்பு இடம், ஒதுக்கீடு செய்யப்பட்டு உட்கார இடவசதி செய்யப்பட்டு உள்ளது. புகார் அளிக்க வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம் வரும் பொது மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு அவர்கள் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் மகிழ்ச்சி கொள்ள காவல் நிலைய அருகில் போலீசார் கோயில் கட்டி வைத்துள்ளனர்.
புகார் மனு கொடுக்க வருகிறவர்கள் கோயிலுக்கு சென்று வணங்கி விட்டு தான் காவல் நிலையத்திற்குள் செல்கிறார்கள். காவல் நிலையம் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதோடு முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. பிரச்சனைகளுடன் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்ந்து மன நிம்மதியுடன் செல்கின்றனர். போளூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து மனு கொடுத்தாலும், ஆன்லைனில் பதிவு செய்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போளூர் காவல் நிலையத்திற்கு ஐஎஸ்ஐ தரச்சான்று வழங்கப்பட்டது. இதனை போளூர் காவல் நிலையத்திற்கு ஐஎஸ்ஐ நிறுவனத்தினர் வருகை தந்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷிடம் வழங்கினர். மேலும் போளூர் காவல் நிலைய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.