தஞ்சாவூர், மே 23:கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க தலைவர் ரவி 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று தஞ்சாவூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏஐடியூசி சங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் பேசினார். நிகழ்ச்சியில் சிஐடியு மத்திய சங்க பொருளாளர் ராமசாமி, ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் சரவணன் ஏ ஐ டி யூ சி மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, நிர்வாகிகள் முருகவேல், செல்வராஜ், நல்லதம்பி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி முடிக்க வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 20 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சுமார் 103 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை அறிவித்து, ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம், தரமான பயண சேவையை உறுதி செய்வோம், போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்வது உள்ளிட்ட தனியார் மய முயற்சிகளை முறியடிப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.