நாகப்பட்டினம்: எண்ணும் எழுத்தும் வகுப்பறை வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடம் கற்கின்றனர் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார். நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023ம் கல்வி ஆண்டில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. ஆடல், பாடல் விளையாட்டுகள் செயல்பாடுகள் மூலம் கற்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். அதன்மூலம் குழந்தைகளின் திறமைகள் பலவற்றை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் வகுப்பறை வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கின்றனர். 2023-24ம் கல்வியாண்டில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமானது வரும் 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் அறிவை பெறுவதை உறுதி செய்வதாகும் இதுபோல இந்தத் திட்டத்தில் உள்ள பல சிறப்பம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு காணொளி காட்சியானது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு காணொளி ஒன்று தஞ்சாவூர் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கல்விபெலோஷிப் குழுவினரால் கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலோடு தயாரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் வலைதள பக்கத்தில் காணொளி ஆனது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் பயிற்சி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர்லால், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.