அஞ்சுகிராமம், ஜன.25: அகஸ்தீஸ்வரம் வட்டாரம் இராமபுரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்னும் தலைப்பில் பண்ணைப் பள்ளி அறிமுக வகுப்பு நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சுனில்தத் தலைமை வகித்து வேளாண்மைத்துறை திட்டங்கள் மற்றும் மண்வள மேலாண்மை மற்றும் இயற்கை உரம் இடுவதால் மண்ணில் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் மண் ஆய்வின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். மண்ணிலுள்ள பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை கணக்கிட்டு சமச்சீர் முறையில் உரமிட வேண்டும் என விளக்கப்பட்டது. மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் அல்மாஸ் பாத்திமா மண் ஆய்வு மற்றும் மண் சேகரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கமளித்தார். இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா மற்றும் உழவர் நண்பர் அஜித் உட்பட நெல் விவசாயிகள் 25 பேர் கலந்து கொண்டனர்.
உழவர் நலத்துறை சார்பில் பண்ணை பள்ளி அறிமுக வகுப்பு
previous post