சிவகாசி, செப்.8: உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுவதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் விதைப்பு பணிக்கு தயாராகி வருகின்றனர். மானாவாரி மற்றும் நீர்ப்பாய்ச்சல் முறையில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வம்பன் 8 மற்றும் வம்பன் 10 உயர் விளைச்சல் உளுந்து விதைகள் 50% மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உளுந்து விதையுடன் விதை நேர்த்தி செய்து விதைப்பதற்கு ரைசோவியம் பயிறு மற்றும் பாஸ்போ பாக்டீரியா என்ற திரவ உயிர் உரங்கள் ரூபாய் 150 மானியத்திலும், பயிறு வகை பயிர்களில் வேர் அழுகல் நோய் வராமல் தடுப்பதற்கு டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் பூஞ்சான கொல்லிகளும், அடி உரமாக பயறு வகை நுண்ணூட்ட உரங்கள் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 50% மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கண்ட இடுபொருட்களை வழங்கி பயன் பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.