புதுக்கோட்டை, நவ.19: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நாளை(20ம்தேதி) பிற்பகல் 3 மணியளவில் ஹோட்டல் சாரதா கிராண்ட் கூட்ட அரங்கு, புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையேற்கும் விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்தரங்கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை கூற உள்ளனர். நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள், வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உரை நிகழ்த்துகின்றனர். தொழில் துறையினர், வணிகர், தொழில் முனைவோர், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுயதொழில் ஊக்குநர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.