திருவண்ணாமலை, ஜூன் 25: திமுக ஆட்சி காலங்களில் தான் தமிழ்நாட்டில் மக்கள் உயிர் காக்கும் உயர் மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பல் மருத்துவம், இருதய நோய், மகளிர் நலன், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: கலைஞர் ஆட்சி காலங்களில் தான் மருத்துவத்துறை முக்கியத்துவம் பெற்றது. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டன. மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க அதிக எண்ணிக்கையில் டாக்டர்கள் தேவை என்பதால், மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்கியவர் கலைஞர். தமிழ்நாட்டில்தான் அதிகபட்டசமாக அரசு மருத்துவ கல்லூரியில் 37 உள்ளன. அதோடு மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து 62 மருத்துவமனைகள், ஒரு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளன. 1,830 அரசு ஆரம்ப சுகாார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 417 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதேபோல், கண்ெணாளி திட்டம் தொடங்கி அதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கு கண்ணொளி வழங்கியவர் கலைஞர். தொழுேநாயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லங்களை தொடங்கி, அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளித்து தமிழ்நாட்டில் தொழுநோயை முற்றிலுமாக ஒழித்தவர் கலைஞர்.
அரசு ஊழியர்களுக்கு கலைஞர் ஆட்சியில் தான் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் பயன்பெறுவதற்கான மகப்பேறு திட்டம் கொண்டு வந்ததும் கலைஞர் ஆட்சியில்தான். ஆபத்து ஏற்படும் நேரத்தில் அழைத்த குரலுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து நிற்கும் நாம் கண்ணுக்கு தெரிந்த கடவுளாக இருக்கிறது. இத்திட்டத்தையும் வழங்கியவர் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியவர் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்னுயிர் காக்கும் 48 திட்டம் மூலம் விபத்தில் சிக்கியவர்களின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. கலைஞர் காப்பீடு திட்டமாக தொடங்கப்பட்டு தற்போது முதலமைச்சரின் காப்பீடு திட்டம் என அழைக்கப்படும் திட்டத்தை 2006-2011ல் கலைஞர்தான் கொண்டு வந்தார். சென்னை கிண்டியில் உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை ₹230 கோடியில் கலைஞர் பெயரில் கட்டப்பட்டுள்ளது. உயர் மருத்துவ சிகிச்சைக்கான எல்லா வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையையும் திராவிட மாடல் ஆட்சிதான் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரா.தரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், துரைவெங்கட், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரவிந்தன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பாபுஜி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.