அம்பை: நெல்லை மாவட்டத்தின் பிரதான பெரிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை நிரம்பி வழிகிறது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைலப்பகுதியில் இயற்கை எழிலுடன் அமையப் பெற்றுள்ள மணிமுத்தாறு அணை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றாகும். வடகிழக்கு பருவமழை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழையால் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் 110 அடியைத் தாண்டியது. இந்நிலையில் நேற்று முன்தினம் (8ம் தேதி) இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அணை நீர்மட்டம் 117.40 அடியை தாண்டியது. அணையை தீவிரமாகக் கண்காணித்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏற்கனவே அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியதும் 1வது மற்றும் 2 ரீச்கள் வாயிலாக பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தனர். ஆனால் கால்வாயில் மலைச் சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பிரதான கால்வாய் மூடப்பட்டது. இதன் காரணமாக மணிமுத்தாறு அணை வேகமாக நிரம்பி வந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 117.50 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவிப்பொறியாளர்கள் தங்கராஜன், மகேஷ்வரன், சிவகணேஷ் உள்ளிட்டோர் மேற்பார்வையில் பிரதான கால்வாயில் 445 கனஅடியும், பெருங்கால் மதகின் மூலம் விநாடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணை வழியாக 453 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொருத்து கூடுதல் மதகுகள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மணிமுத்தாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.5 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் நிரம்பியது மணிமுத்தாறு அணை பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழையின் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் நிரம்பி விடும். டிசம்பர் கடைசியில் மழை குறைந்து விடும் என்பதால், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் ஜனவரி மாதத்தில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கும். ஜனவரி மாதம் அணை நிரம்புவது என்பது எப்போதாவது நடக்கும் நிகழ்வாகும். கடைசியான கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிக மழை காரணமாக மணிமுத்தாறு அணை முழுமையாக நிரம்பியது. அதற்கு பிந்தையை ஆண்டுகளில் ஜனவரியில் அணை நிரம்பவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரியில் மணிமுத்தாறு அணை நிரம்பியுள்ளது….