உடையார்பாளையம், செப்.24: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா அரியலூர் மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளில் கலைவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த கலைவிழாவில், பள்ளி அளவில் கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 50 மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். விழாவில், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை முல்லைக்கொடி தலைமை வகித்தார். ஆசிரியர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் கலந்துகொண்டு கலைவிழா போட்டிகளை தொடங்கிவைத்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இப்பள்ளி மாணவி சிம்மவாகினி, அரியலூர் மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைத்து வெற்றி பெற்றததால் அவரை பாராட்டி கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டுவிழா சிறப்புகள் பற்றி தலைமையாசிரியை பேசினார். இந்நிகழ்வில் உடையார்பாளையம் பேரூராட்சி உறுப்பினர்கள் பிரபாகரன், கீதா கொளஞ்சி நாதன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் ஆசிரியர்கள் செல்வராஜ், ரகுபதி, பாவை சங்கர், தமிழாசிரியர் ராமலிங்கம், சாந்தி, சுரும்பார்குழலி, அகிலா, சத்தியா, சங்கீதா, லூர்து மேரி, அருட்செல்வி, காவேரி, மரகதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.