உடுமலை, பிப்.13: உடுமலை நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் மழைக்காலங்களில் வீதி வீதியாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வந்தது. தற்போது, வெயில் காலம் துவங்கியதால் மருந்து அடிப்பதில்லை. இதனால் வாகனம் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சைதான் சந்து பகுதி மக்கள் கூறுகையில், “வெயில் காலங்களில் புழுக்கம் காரணமாக இப்பகுதியில் பலரும் வெளியில் தான் படுக்கின்றனர். ஆனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. முன்பு சைக்கிளில் சந்து சந்தாக சென்று மருந்து அடிப்பார்கள். வாகனம் வந்தபிறகு அதுவும் வருவதில்லை. மேலும், கொசுப்புழுக்களை ஒழிக்க பிளீச்சிங் பவுடர் தெளிப்பது வழக்கம். இப்போது பிளீச்சிங் பவுடரும் போடுவதில்லை. இதனால் பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட வாகனம் பயனின்றி கிடக்கிறது. எனவே, கொசுக்களால் நோய் பரவும் முன் தினசரி தொடர்ச்சியாக மருந்து அடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.