திருத்தணி: உடலின் வெப்பத்தை குறைக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகாதேவி கூறியுள்ளார். திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த, பத்து நாட்களாக திருத்தணியில், தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். மேலும், மின்விசிறிகள் இயக்கும்போதும், அனல் காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி கூறியதாவது: தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது.
இதனால், மக்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், பழச்சாறுகள் தயாரித்து பருக வேண்டும். எலுமிச்சை பழச்சாறு அதிகளவில் பருகினால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி தருவதுடன், உடலின் வெப்பத்தையும் குறைக்கும். இன்னும், ஒன்றரை மாதத்திற்கு மதியம், 12 மணி முதல் மாலை, 4.30 மணி வரை மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்துவரிடம் சிகிச்சை பெற்று, அவரது ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என கூறினார்.