உசிலம்பட்டி, மார்ச் 7: உசிலம்பட்டி அருகே, காரில் கஞ்சா கடத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி- தேனி சாலையில் உள்ள தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு தனிப்பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையினர். அதில் 14 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (30) மற்றும் வீரபாண்டி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 14 கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்கள் ரூ.1580 மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.