உசிலம்பட்டி, அக். 23: உசிலம்பட்டி பகுதியில் கஞ்சாவுடன் போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி சிவபிரசாத் உத்தரவின்படி தனிப்படை போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையம் அருகில் உள்ள பங்களாமேடு பகுதியில் சந்தேகப்படும்படி இரு டூவீரில் வந்த 4 பேரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் 2 கிலோ கஞ்சா மற்றும் 48 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் உசிலம்பட்டி கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (20), வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சரவணன் (35), குளத்துப்பட்டி ஜெயராமன் (30), கவுண்டன்பட்டி பாண்டியன் (45) என தெரியவந்தது. இவர்கள் உசிலம்பட்டியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்தவற்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கொண்டு வந்துள்ளனர்.
இவர்களில் ஜெயராமன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக உள்ளார்.
இவர் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் கண்ணன் (35) என்பவருடன் இணைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்ணன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இவர்கள் கொள்முதல் செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.