ஈரோடு, ஆக.8: ஈரோட்டில் பேட்டியா சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (பேட்டியா) தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டினையொட்டி ‘பேட்டியா பேர்-2023’ என்ற கண்காட்சி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடக்கிறது.
இதில், 80க்கும் மேற்பட்ட அனைத்து வகையான சங்கங்கள் இணைந்து ஜவுளி, உணவு பொருட்கள், பர்னிச்சர், நகை, கணினி, வீட்டு உபயோக பொருட்கள், வீட்டிற்கு தேவையான ஹார்ட்வேர் மற்றும் சேனிடரிவேர் பிட்டிங், கட்டுமான பொருட்கள் மற்றும் சோலார் பொருட்களுக்கு 260க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கின்றனர். இந்த கண்காட்சியில் உற்பத்தி மற்றும் சர்வீஸ் நிறுவனங்களாக எம்எஸ்எம்இ மற்றும் உதயம் பதிவு பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில்,
பெண் தொழில்முனைவோர்களுக்கு 100 சதவீதம் மானியம் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் பதிவு பெற்ற பிரிவினருக்கும் 100 சதவீதம் வரை மானியமும், மேலும் அனைத்து பிரிவு எம்எஸ்எம்இ பதிவுகளுக்கு 80 சதவீதம் வரை மானியமும் பெற அனுமதி பெறப்பட்டுள்ளது. கண்காட்சி அரங்குகளுக்கான முன்பதிவு செய்ய 98427 22170, 98427 18867 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.