ஈரோடு, ஜன.22: ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. இதனால், நேற்று மீன் விற்பனை அதிகரித்தது. ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரம் 15 டன் அளவிற்கு கடல் மீன்கள் வரத்தாகி இருந்தது. இது கடந்த வாரத்தை விட கூடுதலாகும். இதனால், மீன்கள் விலை கடந்த வாரத்தை விட விலை குறைந்து விற்பனையானது. இதன்காரணமாக மீன்களின் விற்பனையும் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
இதில், கடந்த வாரம் தேங்காய் பறை ஒரு கிலோ ரூ.1,000க்கு விற்றது நேற்று ரூ.850க்கும், கடந்த வாரம் ரூ.550க்கு விற்ற மதன மீன் நேற்று ரூ.450க்கும், ரூ.450க்கு விற்ற சங்கரா மீன் நேற்று ரூ.350க்கும், ரூ.1,000க்கு விற்ற வஞ்சர மீன் நேற்று ரூ.800க்கும், ரூ.800க்கு விற்ற கருப்பு வாவல் மீன் நேற்று ரூ.400க்கும் விற்பனையானது. இதேபோல, ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில்: ப்ளூ நண்டு- ரூ.700, கடல் இறால் ரூ.650, முரல் ரூ.450, விலாங்கு-ரூ.350, சாலமோன்-ரூ.900, ஊளிரூ-500, மத்தி-ரூ.200, அயிலை ரூ.250, கிளி-ரூ.550, வெள்ளை வாவல் ரூ.950, ரோகுரூ.180, கட்லா-ரூ.200 ஆகிய விலைகளில் விற்பனையானது.