கும்மிடிப்பூண்டி, மே 12: கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புறம் 35 வயது இளம் பெண் ஆடைகள் இன்றி முகத்தில் ஆங்காங்கே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதும், அந்தப் பெண் 2 தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 8 மணி அளவில் மது வாங்கிக் கொண்டு பெட்ரோல் பங்க் இருட்டு பகுதியில் சென்றதாகவும் தெரிய வந்தது. அப்போது அவரை பின்தொடர்ந்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் (21), கண்ணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெபக்குமார் (24) ஆகிய 3 பேரும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்தப் பெண் ஆசைக்கு இணங்காததால், வாலிபர்கள் பெண்ணை தரதரவென வயல்வெளிக்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து கற்பழித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதில் சூர்யா, சுரேந்தர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பாதிரிவேடு போலீசார் 3 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.