புதுச்சேரி, ஜூலை 7: புதுச்சேரி முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் சத்யம். தனியார் ஓட்டலில் மேலாளர். இவரது மனைவி புஷ்பாவதி என்கிற அபிநயா (30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தையை விடுவதற்கு புஷ்பாவதி தனது பைக்கில் அஜந்தா சிக்னல் அருகே சென்றபோது, அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், புஷ்பாவதியின் கையில் அணிந்திருந்த ஒரு சவரன் கைசெயினை, கண் இமைக்கும் நேரத்தில் அறுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். அந்த நபரை பிடிக்க புஷ்பாவதி துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.
முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து செயின் பறிப்பு குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணிடம் செயினை பறித்து சென்றது கடலூர் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பிளான்ட் ஏசி மெக்கானிக்காக இருக்கலாம் என தெரியவந்தது. போலீசார் அவர் பணியாற்றிய இடத்துக்கு சென்று விசாரித்தபோது, அவர் வேலைக்கு வராமல் தலைமறைவானதாக தெரிகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம் தொள்ளாமூரை சேர்ந்த தனசிங்(24) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை விழுப்புரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு கடினமாக இருந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக போலீசிடம் கூறியுள்ளார்.