தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நானோ யூரியா உரத்தை பயிர்களுக்கு இலைவழி தெளிப்பு முறை செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. நானோ யூரியா ஒரு திரவ உரமாகும். 500 மி, நானோ யூரியா, ஒரு மூட்டை யூரியாவிற்கு நிகரான பலனை கொடுக்கிறது. யூரியா உரத்தை மண்ணில் இடும்போது 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் நானோ யூரியாவை இலைவழியில் தெளிப்பதன் மூலம் 80 முதல் 90 சதவீதம் தலைச்சத்து பயிர்களுக்கு கிடைக்கிறது. இந்த நானோ யூரியா தெளிப்பதன் மூலம் இலை முதல் வேர் வரை சென்று பயிர்களுக்கு தேவையான தலைச்சத்து கிடைக்கும். நெல் பயிர் நடவு செய்த 30 முதல் 35வது நாளில் ஒரு முறையும், 45 முதல் 50வது நாளில் இரு முறையும் நானோ யூரியாவை இலை வழியில் தெளிக்கலாம். இந்த இலை வழி மருந்து தெளிப்பு மூலம் மண் மற்றும் நீர் மாசுபாடு குறைந்து, மகசூல் அதிகரிக்கும். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 500 மி, நானோ யூரியா போதுமானது. இலை வழி உரம் தெளிப்பு செயல்விளக்கம் குள்ளப்புரம் விவசாயி மாரிச்சாமி என்பவரது சாகுபடி நிலத்தில் அளிக்கப்பட்டது. இந்த செயல்விளக்கத்தின் போது வேளாண்மை இணை இயக்குநர் செந்தில்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்திரசேகரன், பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் சென்றாயன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் உஷாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், கிஷோர் மற்றும் கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்….