விராலிமலை: இலுப்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கட்டையால் தாக்கியதை தொடர்ந்து மனைவி அளித்த புகாரில் போலீசார் கணவனை கைது செய்தனர். இலுப்பூர் அருகே உள்ள சின்ன குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50) இவருக்கும் ஈஸ்வரி(39) என்ற பெண்ணுக்கும் கடந்த 21 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 ஆண், ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனைவி ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் ரவிச்சந்திரன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரிக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கணவன் ஈஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த அவரது தாய் பூங்கோதை மீதும் தாக்குதல் நடத்தியதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த ஈஸ்வரி, பூங்கோதையை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து ஈஸ்வரி இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.