விராலிமலை,ஆக.11: இலுப்பூர், மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்து வந்தனர். கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வணிக கடை வியாபாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இருள் சூழத்தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் இலுப்பூர், இருந்திரப்பட்டி, சாங்கிராப்பட்டி, வீரப்பட்டி,உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருகெடுத்து ஓடியது. கடும் வெயிலுக்கு மத்தியில் பெய்த இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முதுமொழிக்கேற்ப இந்த மழையானது தற்போது பெய்துள்ள நிலையில் மழையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த மழை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர், வடகாட்டுப்பட்டி பகுதியிலும் கனமழை பெய்தது. இந்த மழையினால் இழுப்பூரில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.