திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் தோக்கமூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில், கிராம ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் சங்கர், ராஜவேல், பழனி, பரந்தாமன், மூர்த்தி, வினோத், சேகர் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியதாவது:நாங்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் தோக்கமூர் கிராமத்தில் காலம் காலமாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இப்பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடநெருக்கடியுடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க கோரி கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நாங்கள் அனைவரும் இட நெருக்கடியில் குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்….