விளாத்திகுளம்,பிப்.24: குளத்தூர் அருகே பனையூரைச் சேர்ந்த உப்பள தொழிலாளர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குளத்தூர் அருகே பனையூரைச் சேர்ந்த 90 உப்பள தொழிலாளர்களின் குடும்பத்தினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஏற்கனவே மனு அளித்ததாகவும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஒன்றிய பாஜ தலைவர் பார்த்திபன் தலைமையில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவில், பனையூர் கிராமத்தில் 90 உப்பள தொழிலாளர்கள் குடும்பத்தினர் உள்ளோம். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் ராமகிருஷ்ணன், ‘அனைவரும் அளித்துள்ள மனுக்களின் மீதும் உடனடியாக விஏஓ மூலம் விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தார். இதில், பனையூர் கிராம தலைவர் வேலுமுனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.