ஓசூர், அக்.10: ஓசூர் அருகே குருபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி சப் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் பானு பாபுலால் தலைமையில் மனு அளித்தனர். இதுகுறித்து குருபட்டி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குருப்பட்டியில், 500 குடும்பங்கள் நூறாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஒரு சிலருக்கு 2001ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு மாதத்திற்கு பின்னர் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை அனைத்தும் சப் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.