சென்னை: இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்தி செல்ல முயன்ற இருவர் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ள சென்னை வெடிகுண்டு வழக்குகளுக்கான பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்க உள்ளது. அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 2019ல் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஜேசுராஜ் (எ) ராஜேந்திரன், கணேசன் ஆகியோரை சோதனை நடத்தியதில் அவர்களிடம் வெடிகுண்டுகளை தயார் செய்வதற்கான டெட்டனேட்டர்கள், வயர் போன்ற பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இருவரும் இலங்கை தமிழர்கள் என்றும் சென்னையிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்களை எடுத்து செல்ல இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீசார் அவர்கள் மீது வெடி பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுகிறது. தண்டனை விவரம் திங்கட்கிழமை (நாளை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்….