கழுகுமலை, நவ. 4:கழுகுமலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர், இப்பகுதியில் மாட்டு இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த மற்றொரு மாடசாமி மகன் பாக்கியராஜ் (35), கட்டிட தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கோவில்பட்டியில் நடந்த விபத்தில் பலியானார். அவரது உடல் தகன நிகழ்ச்சியில் வைத்து ஜெயக்குமார், பாக்கியராஜ் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஜெயக்குமார், தனது வீட்டுமுன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த பாக்கியராஜ், ஜெயக்குமாரைஅரிவாளால் வெட்டினார். இதில் தலையில் வெட்டு விழுந்த அவருக்கு உடனடியாக கழுகுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கழுகுமலை எஸ்ஐ குருசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பாக்கியராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.